ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இயக்கத்தில் சிக்கிய சென்னை வாலிபர்கள்: மீட்க முயற்சி
பாக்தாத்: ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இரண்டு சென்னை வாலிபர்கள் இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது மாயமாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லீம் பிரிவு அதிபருக்கு எதிராக சன்னி பிரிவு இளைஞர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். அங்கு கடந்த சிலமாதங்களாக உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
இவர்களுடன் சிரியா நாட்டு தீவிரவாதிகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் இவர்களது தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஈராக் நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றினை இந்த தீவிரவாத குழுவினர் கைப்பற்றிவிட்டனர். சமீபத்தில் இந்த இயக்கம் தாக்குதல் நடத்தி அங்கு பணிபுரியும் இந்தியர்களை சிறை பிடித்தனர்.
சென்னை வாலிபர்கள்
இந்த நிலையில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 2 சென்னை வாலிபர்கள் இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த 2 இளைஞர்களும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது திடீர் என்று மாயமாகிவிட்டனராம்.
தீவிரவாத குழுவில்
அவர்களது பெயர் விவரமும் உளவு துறைக்கு கிடைத்துள்ளது. அதை அதிகாரிகள் வெளியிடவில்லை. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு தற்போது சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வரும் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி என்பவர் தான் இந்த இரு இளைஞர்களையும் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விட்டார் என்ற தகவலை உளவு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மீட்க முயற்சி
இதையடுத்து உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 2 சென்னை வாலிபர்களின் பெயர்களை கண்டு பிடித்து விட்டனர். ஆனால் பெயர்களை வெளியிடாமல் பெற்றோர் மூலமாக இருவரையும் மீட்டு இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரும் முயற்சியில் உளவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கப்பூர் போன வாலிபர்கள்
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் சென்று ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பூர்வீகம் கடலூர். இவர்தான் சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்களையும் தேர்வு செய்து உஸ்மான் அலியிடம் ஒப்படைத்துள்ளார். அவர் அவர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரகசிய சந்திப்பு
உஸ்மான் அலி சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் சிரியா சென்று அங்கு சிலரை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். கடந்த ஆண்டும் இவர் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்று சிலரை சந்தித்த தகவலும் கிடைத்துள்ளது.
மூளைச்சலவை
இவர் 2007-ம் ஆண்டே கல்லூரியில் படித்து வந்த இளைஞர்களை பல முறை சந்தித்து அவர்களை மூளைச் சலவை செய்துள்ளார். கடலூரில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்றும் பின்னர் சிங்கப்பூர் அழைத்துச் சென்று உஸ்மான் அலியிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் உளவுத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.