பாகிஸ்தானுக்கு "எமனா"கும் ஏமன் யுத்தம்... ஈரானுக்கும் செளதிக்கும் இடையே சிக்கி 'விழிபிதுங்குகிறது'!!
இஸ்லாமாபாத்: ஏமனில் தமது தலைமையில் நடைபெறும் யுத்தத்துக்கு உதவுமாறு பாகிஸ்தானை செளதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமனில் செளதி யுத்தம் நடத்துவதால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஒரு முடிவெடுத்தால் ராணுவம் அதற்கு நேர் எதிரான முடிவெடுப்பது வழக்கம். தற்போது பாகிஸ்தான் அரசும், ராணுவமும் ஏமன் விவகாரத்தில் செளதி அரேபியாவை ஆதரிப்பதா இல்லையா என்பதில் ஒருசேர குழப்பத்துடன் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டுகிற நாடுகளில் முதன்மையானது செளதிதான்.. கடந்த ஆண்டு மட்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தானுக்கு செளதி நிதி உதவியாக கொடுத்துள்ளது. அத்துடன் 1999ஆம் ஆண்டு பர்வேஷ் முஷாரப்பால் தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போது அவருக்கு அடைக்கலம் கொடுத்ததும் செளதிதான்.
ஏமன் போரில் இணைந்து கொள்ளுமாறு செளதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும் அதை தாமதித்தே வருகிறது பாகிஸ்தான்.. அப்படி செளதியின் வேண்டுகோளை ஏற்று ஏமன் போரில் பாகிஸ்தான் குதிப்பது என்பது ஆழ்கடலில் குதிப்பது அல்லது பெரும் தீமையைத் தேடிப் போவது என்ற இரண்டில் ஒன்றாகத்தான் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..
பாகிஸ்தானில் ஏற்கெனவே தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தானும் தீவிர யுத்தத்தை நடத்தி வருகிறது.
ஏமனில் ஷியா ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் முழுமையாக ஆதரவு தருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஏமனில் ஷியாக்களுக்கு எதிரான யுத்தத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உள்நாட்டில் மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கும்.
அத்துடன் ஈரானுடன் எல்லையைக் கொண்டதாகவும் பாகிஸ்தான் இருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையையே பாகிஸ்தானில் ஏற்படுத்தும். பாகிஸ்தான் மக்களைப் பொறுத்தவரை ஏமன் யுத்தத்துக்கு அந்நாடு போகக் கூடாது என்பது பொது கருத்தாக இருக்கிறது.
அப்படி பாகிஸ்தான் அங்கு போர்க்களத்தில் இறங்கினால் பாகிஸ்தான் வீதிகளில் ஷியா -ஷன்னி முஸ்லிம்களிடையே மோதல் ஏற்பட்டு ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் என்பதுதான் நிலையாக இருக்கிறது.
உள்நாட்டிலேயே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது; ஒருபக்கம் நிதி கொடுக்கும் செளதி அழைக்கிறது; மறுபக்கம் ஈரானை பகைத்துக் கொண்டும் ஏமன் போர்க் களத்துக்கும் போக முடியாது..
இதனால் என்னதான் செய்வது என விழிபிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான்.. இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் விவாதிக்க இருக்கின்றனர்..
ஏமனை முன்வைத்து பாகிஸ்தான் என்ன முடிவெடுத்தாலும் அந்நாட்டுக்கு எமனாகத்தான் அமையும் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.