ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுத் தர முடியாது.. பேச்சுவார்த்தைக்கு முன்னர் கொக்கரிக்கும் சீன ஊடகம்
பெய்ஜிங்: ஒரு இஞ்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என பேச்சுவார்த்தைக்கு முன்னரே சீன ஊடகங்கள் கொக்கரித்து வருகின்றன.
தங்களுக்கு சொந்தமான பகுதியில் இந்தியா சாலை பணிகளை அமைத்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அது போல் இந்திய பகுதியில் ரோந்து வாகனங்கள் செல்லவும் அந்நாட்டு ராணுவம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் பங்காங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு நாட்டு ராணுவத்தினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பு வீரர்களும் காயமடைந்தனர்.
மோடியின் அடுத்தடுத்த 5 "மாஸ்டர் ஸ்டிரோக்".. திடீரென ஒடுங்கிய சீனா.. லடாக்கில் நடந்த திருப்பங்கள்!
ராணுவத்தினர்
அந்த நாள் முதலே இந்த பகுதியில் இரு நாட்டினரும் ராணுவத்தினரை குவித்தனர். தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வந்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சுமூகத் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
சீன ஊடகம்
இந்த நிலையில் இன்று இருநாட்டு ராணுவத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஒரு இன்ச் நிலத்தைகூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா
இதுகுறித்து சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது செய்தியில் கூறுகையில் இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க சீனா விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அண்டை நாடுகளுடன் சுமுக நட்புறவை பேணுவது என்பதே சீனாவின் அடிப்படை கொள்கையாகும். இந்தியாவை எதிரியாக்க எங்களிடம் எந்த காரணமும் இல்லை.
இந்தியா
ஆனால் அதே சமயம் ஒரு இன்ச் நிலப்பகுதியை கூட இந்தியாவுக்கு விட்டுத் தரமாட்டோம். இந்தியா ஒரு தவறான முடிவில் சீன எல்லைக்குள் வந்தால் அதை ஒரு போதும் சீனா மன்னிக்காது. சீனா வலுவான, திடமான தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எல்லை பகுதிகளில் சீனா- இந்தியா ராணுவ நடவடிக்கைகளில் சீனா பாதகமாக இருக்காது என்பதை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது என்பதை நம்புகிறோம்.
இரு நாடுகள்
எல்லை விவகாரத்தில் இரு நாடுகளும் மோதல் போக்கை சந்தித்தால் ஒட்டுமொத்த இமயமலை பகுதியும் இந்திய துணைக் கண்டமும் ஸ்திரமற்ற தன்மையை சந்திக்கும். எந்தவித வெளிப்பற சக்தியாலும் இதை மாற்ற முடியாது. எல்லை பகுதிகளில் அமைதியை பேணிகாப்பது, நல்லுறவு ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளின் நலன்களுக்கேற்ப உள்ளது.
அமெரிக்கா
இந்தியாவுடனான நட்புறவுக் கொள்கையை சீனா தெளிவுப்படுத்திவிட்டது. எனவே அமெரிக்காவால் ஏமாற்றப்படுவதற்கு பதில் இந்தியாவும் சீனாவுடன் நட்புறவை திருப்பி செலுத்த வேண்டும். அமெரிக்காவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சாததால் சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின் ஆதரவை பெற விரும்பும் சில சக்திகளை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.