"டியங்காங்-2"வைச் சென்றடைந்தனர் சீனாவின் ஹைபெங்.. சென் டாங்!
பெய்ஜிங்: விண்வெளியில் ஒரு மாதம் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காகச் சென்றுள்ள சீன விண்வெளி வீரர்கள், டியங்காங்-2 ஆய்வகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
சீனா விண்வெளியில் தனக்கென ஒரு நிரந்தர விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கான முதல்கட்ட பணிகள் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணி கடந்தமாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தை 2022-க்குள் கட்டி முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான பணிகளுக்காக விண்வெளியில் சுமார் ஒரு மாதம் தங்கியிருக்க, ஜிங் ஹைபெங் (50), சென் டாங்(37) என்ற இரண்டு சீன விண்வெளி வீரர்கள் கடந்த திங்களன்று பூமியில் இருந்து புறப்பட்டனர்.
சீனாவின் ஜியோசுவான் செயற்கைக்கோள் தளத்திலிருந்து இவர்கள் இருவரும் ஹெங்ஸோ-11 என்ற விண்கலம் மூலம் விண்ணில் பறந்தனர்.
இந்த விண்கலமானது அதிகாலை 1 மணியளவில் டியங்காங்-2 விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது ஆய்வுப் பணிகளை விண்வெளி வீரர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இதுதான், சீன விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் விண்வெளியில் மேற்கோள்ளும் ஆய்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது பணிகளை முடித்து விட்டு இந்த விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்ப ஏதுவாக புதிய விண்கலத்தையும் சீனா ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஜுன் மாதம் சீன விண்வெளி வீரர்கள் 8 நாட்கள் மற்றும் 12 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.