மும்பை தாஜ் ஹோட்டலில் மனைவியுடன் தங்கி உளவு பார்த்தேன்: ஹெட்லி
நியூயார்க்: தாஜ் ஹோட்டலில் தங்கி உளவு பார்த்ததாகவும், லஷ்கர் இ தொய்பா அமைப்பு அந்த ஹோட்டலை தாக்கும் என்று தனக்கு தெரியாது என்றும் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று தொடர்ந்து 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
தாஜ் ஹோட்டல்
நான் வீடியோவும், புகைப்படங்களும் எடுத்த பிறகு லஷ்கர் இ தொய்பா தாஜ் ஹோட்டலை தாக்கும் என்று எனக்கு தெரியாது.
மும்பை
நான் முதன் முதலாக 14.9.2006 அன்று கராச்சியில் இருந்து இந்தியாவுக்கு சென்றேன். மும்பையில் அலுவலகம் அமைக்க தவாஹிர் ராணா(லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி) எனக்கு அனுமதி அளித்தார்.
விமான நிலையம்
ராணாவின் நண்பர் பஷீர் ஷேக் என்னை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். பஷீரை முதன்முதலாக மும்பையில் தான் சந்தித்தேன். அவரை எனக்கு முன்பே தெரியாது.
பஷீர்
பஷீர் தான் மும்பையில் எனக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார். நான் 14.9.2006 முதல் 28.9.2006 வரை தான் முதன்முதலாக தாஜ் ஹோட்டலில் தங்கினேன்.
அலுவலகம்
முதன்முதலாக மும்பை வந்தபோது அலுவலகம் அமைத்தேன். லஷ்கர் இ தொய்பா எதற்காக மும்பையை தாக்கினார்கள் என்பதை கேட்க முயற்சிக்கவில்லை.
உளவு
நான் தாஜ் ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் மனைவி பாய்சாவுடன் தங்கியிருந்தேன். தாஜ் ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் உளவு பார்க்குமாறு சஜித் மிர் தெரிவித்தார். உளவு பார்த்து நான் தகவல்களை மேஜர் இக்பாலிடம் தெரிவித்தேன்.
பாராட்டு
தாஜ் ஹோட்டலின் புகைப்படங்கள், வீடியோக்களை மேஜர் இக்பால், சஜித் மிர்ரிடம் அளித்தேன். அந்த புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து இக்பாலும், சஜித் மிர்ரும் என்னை பாராட்டினார்கள்.