பண்ணையார்களின் நிலங்களை மக்களுக்குப் பிரித்து கொடுத்த ஏழைப்பங்காளன் பிடல் காஸ்ட்ரோ
புரட்சியின் மூலம் கியூபா நாட்டைக் கைப்பற்றிய பிடல் காஸ்ட்ரோ பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
ஹவானா: மாபெரும் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ சிறந்த பிரதமராகவும், மிகச்சிறந்த அதிபராகவும் கியூபா நாட்டு மக்களால் அறியப்பட்டுள்ளார்.
வேளாண்மை மற்றும் சர்க்கரைத் துறை வளர்ச்சியால் கியூபா உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. மக்களின் நலவாழ்வில் அக்கறையுடைய காஸ்ட்ரோ, உலகத்திலேயே மக்கள் மருத்துவர் விகிதத்தில் கியூபாவை முதலிடத்தில் இடம்பெறச் செய்தார்.
பிரதமர், அதிபர் என ஐம்பதாண்டுகள் நாட்டுக்குத் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோவை முதலாளித்துவ நாடுகள் சர்வாதிகாரி என்று அழைத்தன.
கியூபாவைப் பொதுவுடைமைப் பாதையில் வளர்ச்சி பெறச் செய்த சிற்பி இவர்.
1954ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றிய பிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராக இருந்து பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். எல்லா நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. நில உச்சவரம்புச் சட்டம், மக்களுக்கு நலத்தைப் பிரித்தளிக்க வழிவகை செய்தது.
ஃபிடலின் தந்தை 1940 ஏக்கர் கரும்புத் தோட்டத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. நாட்டைப் பொதுவுடைமைப் பாதையில் வழிநடத்தி அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தினார்.
எழுத்தறிவு, கல்வி, சுகாதாரம் எனப் பல தளங்களிலும் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிகளை எட்டியது. அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைவராகவும் இருமுறை இருந்துள்ளார் பிடல் காஸ்ட்ரோ.