9 கோழிப்பண்ணை தொழிலாளிகள் பாகிஸ்தானில் சுட்டுப் படுகொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோழிப்பண்ணைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேர் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் லெஸ்பெலா மாவட்டத்தில் உள்ள அப்பாஸ்கோத் பகுதியில் கோழிப் பண்ணைகள் உள்ளன.
அங்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்கள் கடத்தல்:
இந்த நிலையில் அங்குள்ள ஒரு கோழிப் பண்ணைக்குள் நேற்று துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேரை மலைப் பகுதிக்கு கடத்தி சென்றனர்.
9 பேர் பரிதாப பலி:
பின்னர் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 9 பேரும் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாகாண ஊழியர்கள்:
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், முஷாபர், பகவல்பூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்கள்.
பலுசிஸ்தான் அரசு கண்டனம்:
இந்த கொடூர சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இக்கொலைக்கு பலுசிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.