வங்கதேசத்தில் தொடரும் பயங்கரம்.. இந்து ஆசிரம ஊழியர் வெட்டி கொலை! உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
டாக்கா: வங்கதேசத்தில் இன்று, இந்து மதத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களில் கொல்லப்பட்ட 2வது இந்திய வம்சாவளி நபர் இவராகும்.
2 தினங்கள் முன்பு, அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது இந்து கோயில் பூசாரி, சைக்கிளில் சென்றபோது 3 பேரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், வாக்கிங் சென்ற 60 வயது நபரான நித்யரஞ்சன் பாண்டே, இன்று காலை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இவர் பப்னா பகுதியிலுள்ள, ஆசிரமம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
90 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் சுமார் 8 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். இந்த தாக்குதலால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை வங்கதேசத்தில் பிற மதத்தை சேர்ந்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பிளாக் எழுதுவோர்கள் என மொத்தம் 40 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அல்லது அல்கொய்தா பொறுப்பேற்ற நிலையில், வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவா, இது உள்நாட்டு மத வெறியர்கள் செயல்தான் என்று கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெறும் இந்த கொலை விவகாரத்தில் இந்தியா உடனே தலையிட வேண்டும் என்று பாதுகாப்பு துறை அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் வங்கதேசத்தை ஒட்டிய இந்திய மாநிலங்களான அசாம், மேற்கு வங்கத்தில், வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்தினால் அது மத கலவரமாக உருமாறிவிடும் என்ற அபாயம் இருப்பதை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.