பிரதமர் மோடியின் பேச்சை பாகிஸ்தானில் விழுந்து விழுந்து பரப்பும் இம்ரான் கான் கட்சியினர்..ஏன் இப்படி?
இஸ்லாமாபாத்: இந்தியாவை எப்போதும் எதிரி நாடாக பாவித்து இந்திய தலைவர்களை சரமாரியாக விமர்சிப்பதை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது பிரதமர் மோடி பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பேசும் ஒரு வீடியோவை இம்ரான் கான் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருவது பாகிஸ்தானியர்கள் பலரையும் புருவத்தை உயர்த்த வைப்பதாய் அமைந்துள்ளது. இம்ரான் கான் கட்சியினர் ஏன் இப்படி செய்து வருகின்றனர் என்ற விவரத்தை இதில் காணலாம்.
பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதை பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்தியாவை எப்போதும் எதிரி நாடாகவும் இங்குள்ள தலைவர்களையும் கடுமையாக விமர்சிப்பதை பாகிஸ்தான் நாட்டு அரசியல் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழலில் மோடியின் பேச்சை பாகிஸ்தானில் ஏன் பரப்புகிறார்கள் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாக எழுந்து பலரும் யோசிக்கத் தொடங்கிய நிலையில் பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசை விமர்சிக்கவே முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியினர் இப்படி டிரெண்ட் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

அணு ஆயுதங்கள் இருந்தால்
கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பர்மர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானை கடுமையாக சாடியிருந்தார். பிரதமர் மோடி பேசுகையில், "பாகிஸ்தானின் ஆணவத்தை நாம் அழித்துள்ளோம். உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு பாகிஸ்தானை தள்ளியிருக்கிறோம். பாகிஸ்தானின் அச்சுறுத்தலையும் நாம் முறியடித்து இருக்கிறோம். அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் நாம் என்ன தீபாவளிக்காக வைத்திருக்கிறோம்" என்று பேசியிருந்தார்.

பாகிஸ்தான் திவாலாகும் நிலை
பிரதமரின் இந்தப் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பைத்தான் இம்ரான் கான் கட்சியினர் பரப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுப்பொருள் பற்றாக்குறையால் பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. பாகிஸ்தானின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

மோடியின் பிரசார உரை..
அணு ஆயுத வல்லமை படைத்த நாடு மற்ற நாடுகளிடம் கெஞ்சுவது வேதனை அளிப்பதாக கூட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். இத்தகைய சூழலில் தான், பாகிஸ்தான் அரசை சாடும் வகையில் மோடியின் பிரசார உரையை இம்ரான் கான் கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். இத்தனைக்கும் பிரதமர் மோடி இப்படி பாகிஸ்தானை பற்றி பேசும் போது அங்கு ஆட்சியில் இருந்தது இம்ரான் கான் தான் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டுதான் இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இழந்து நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக கவிழ்க்கப்பட்டது.

வீடியோ கிளிப் எப்போது எடுக்கப்பட்டது
இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானியர்கள் பலரும் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினரை கேலி செய்யவும் தவறவில்லை. பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர் நைலா இனயத் தனது ட்விட் பதிவில் இது பற்றி கூறும் போது, "தற்போதைய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது குறித்து தெரியப்படுத்த பிடிஐ கட்சியினர் இந்த வீடியோவை பகிருகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மோடியின் இந்த பேச்சு அடங்கிய இந்த வீடியோ கிளிப் 2019 ஆம் ஆண்டின் போது எடுக்கப்பட்டது. அப்போது இம்ரான் கான் தான் இங்கு ஆட்சி நடத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

கடுமையான பஞ்சத்திற்கு காரணம் என்ன?
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. நாட்டின் பெரும் பகுதிகளில் பெய்த மழையால் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கின. 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் அங்கு வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை பாகிஸ்தான் இறக்குமதி செய்ய தொடங்கியது. இருந்தாலும் உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் எகிறியது . விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications