கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய ஆளில்லா விண்கலம் எங்கு விழுமோ?: பீதியில் மக்கள்
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கலம் பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழலாம். விண்கலம் எங்கும் விழுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களுடன் ஆளில்லா விண்கலம் ஒன்றை ரஷ்யா அனுப்பி வைத்தது. 2 ஆயிரத்து 721.5 கிலோ உணவு, எரிபொருள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த விண்கலம் எந்நேரத்திலும் பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விண்கலத்தை கடலில் விழ வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். விண்கலம் பூமியில் விழுந்தால் கடும் சேதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த 3 பேர், இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 விஞ்ஞானிகள் உள்ளனர். ரஷ்யா அனுப்பிய விண்கலம் ஆய்வு மையத்தை அடையவில்லை. இருப்பினும் விஞ்ஞானிகளிடம் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் உள்ளன.
விண்வெளி ஆய்வுப்பணிகளில் அண்மை காலமாக ரஷ்யா தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.