துபாயில் நவீன முறையில் “டிராம்” வண்டிகள் – நவம்பர் 11 முதல் இயக்கம்!
ஷார்ஜா: துபாயில் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் நவீன டிராம் வண்டிகள் வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
இதற்காக தயாரிக்கப்பட்ட டிராம் வண்டிகளின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
பிரான்சில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிராம் வண்டிகள், ஓட்டத்தில் மாறுபட்ட வேகங்கள், பாதுகாப்பு அம்சங்கள், வண்டிகளின் உந்துவிசை, பிரேக், அவசர நிறுத்தங்கள், கதவுகளின் இயக்கம், வண்டியின் சக்தி போன்ற அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
சோதனை ஓட்டம் வெற்றி:
துபாய் அரசின் பல முக்கிய பிரமுகர்களாலும், அதிகாரிகளாலும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது.
முதல்கட்டமாக 11 டிராம்கள்:
முதல் கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கி.மீ தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம்:
44 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த டிராம் வாகனம் சராசரியாக மணிக்கு 21.44 கி.மீ வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
05 பயணிகள் பயணம்:
மொத்தம் 405 பயணிகள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு காலை 5.30லிருந்து நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.
விரிவாக்க திட்டம்:
மேலும் படிப்படியாக 14.5 கி.மீ தூரம் வரை ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிருக்கு தனி வகுப்பு:
டிராம் வண்டியில் ஏழு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு கோல்ட் சூட், நான்கு பெட்டிகள் சில்வர் கிளாஸ் என்ற இரண்டு வகுப்புகளுடன், இரண்டு பெட்டிகள் குழந்தைகள் மகளிருக்கு என்று தனி வகுப்பும் இதில் இருக்கும்.
கலைநயத்துடன் அலங்காரம்:
வண்டிகளின் உட்புறங்களும், நிறுத்தங்களும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு பயணிகளை கவரும் வகையில் டிராம் அமைந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.