'ஒன்இந்தியா தமிழ்' செய்தி எதிரொலி.. சார்ஜாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு
சார்ஜா: 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்தின் உதவியால் சார்ஜாவில் காணாமல் போன தேனியை சேர்ந்த பி.காளியப்பன் ஆறு மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். சில நல்லுள்ளம் கொண்ட தமிழ் நண்பர்கள் புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து தெரிந்து கொண்டு அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைத்தனர்.
சார்ஜாவில் எடிசலாட் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக லட்சுமணன் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனியைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் வசித்து வரும் இவர் தனது பெற்றோரை விசிட் விசாவில் அழைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் சார்ஜா வந்தனர்.
நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து தனியாக நடைப்பயிற்சி சென்றார். அவரிடம் கைபேசி எதுவும் இல்லை. வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்தனர். இரண்டு நாட்களாக அவரது மனைவி சாப்பிடாமல் அழுதபடியே இருந்தார்.
இதையடுத்து, சார்ஜா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.. காணாமல் போன காளியப்பன் குறித்த விபரம் தெரிந்தவர்கள் அவரது மகன் லட்சுமணனை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி போன் எண்ணை கொடுத்து செய்தி வெளியிட 'ஒன்இந்தியாதமிழை' அணுகினார் லட்சுமணன்.
இந்த செய்தி இன்று காலை வெளியிடப்பட்டது. 'ஒன்இந்தியா தமிழ்' தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் அந்த செய்தி ஷேர் செய்யப்பட்டது. அதை நல்லுள்ளம் கொண்ட வளைகுடா வாசகர்கள் பலரும் ஷேர் செய்து உதவினர்.
இந்நிலையில், செய்தி வெளியிட்ட 6 மணி நேரத்திற்குள் காளியப்பன் குறித்த தகவல் லட்சுமணனுக்கு தொலைபேசியில் கிடைத்துள்ளது. வீட்டுக்கு அவர் அழைத்துவரப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மன நிறைவோடு 'ஒன்இந்தியா தமிழுக்கு' நன்றி தெரிவித்துக் கொண்டனர்.