பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் மீது நடந்த தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் சாவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஈரான் நாட்டு எல்லையில் ஷியா முஸ்லிம்கள் மீது சன்னி இஸ்லாமிய பிரிவு தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 24 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஈரான் நாட்டு எல்லையில் பாகிஸ்தானுக்கு உட்பட்ட தப்டான் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த தீவிரவாத குழு ஒன்று தற்கொலை படை தாக்குதலை நடத்தியது. அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இதில், தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகள் உட்பட 24 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர், அதில் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்ததும் ஆறு ஹெலிகாப்டர்களில் விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு குவெட்டா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தன.
தாக்குதலுக்கு சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
சம்பவம் நடந்த ஹோட்டலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அடுத்தடுத்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. ஷியா பிரிவு முஸ்லிம்கள் பலோசிஸ்தான் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பலோசிஸ்தான் மாகாண முதல்வர் அப்துல் மாலிக் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். இன்று காலையில்தான் கராச்சியில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பலரை கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.