மாயமான விமானம் தாய்லாந்து கடலில் கிடக்கிறது: சொல்கிறார் யு.எஸ். பைலட்
நியூயார்க்: மாயமான மலேசிய விமானம் தாய்லாந்து கடல் பகுதி அருகே நீரில் கிடப்பதை இணையதளங்களில் உள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விமானி மைக்கேல் ஹோபெல் தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசிய விமானத்தை பல நாடுகள் சேர்ந்து இந்திய பெருங்கடலில் தேடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விமானம் வளைகுடா பகுதியில் இருப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த விமானி மைக்கேல் ஹோபெல்(60) விமானம் குறித்து புதிய தகவலை அளித்துள்ளார்.
இணையதளம்
அவர் TomNod.com என்ற இணையதளத்தில் மாயமான மலேசிய விமானம் பற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்துள்ளார்.
மலேசிய விமானம்
ஆய்வின்போது அவர் மலேசியாவின் வடகிழக்கு கடல் பகுதி அருகே தாய்லாந்தில் உள்ள சோங்க்லா நகரின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் விமானம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போயிங்
அந்த இணையதளத்தில் கடலுக்குள் கிடப்பதாக காண்பிக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தை போன்று போயிங் ரகத்தை சேர்ந்தது. கடலுக்கு அடியில் கிடக்கும் விமானத்தின் டிசைன் மலேசிய விமானத்தை போன்றே உள்ளது என்றார் மைக்கேல்.
எஃப்.பி.ஐ.
மைக்கேல் தான் விமானத்தை செயற்கைக்கோள் படங்களை வைத்து கண்டுபிடித்த கையோடு அதை எஃப்.பி.ஐக்கு தெரிவித்துள்ளார். ஆனால் எஃப்.பி.ஐ. இன்னும் அவரை தொடர்புகொள்ளவில்லை.