உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி 112வது வயதில் நியூயார்க்கில் மரணம்
நியூயார்க்: உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி தனது 112வது வயதில் நியூயார்க்கில் மரணம் அடைந்தார்.
உலகின் வயதான மனிதர் ஸ்பெயின் வம்சாவளியைச் சேர்ந்த சலுஸ்டியானோ சான்சேஸ்-பிளாஸ்கெஸ்(112). அவரின் பட்டபெயர் ஷார்ட்டி. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்தார். அவர் கடந்த 1901ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஸ்பெயினில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் தனது நண்பர்களுடன் கடந்த 1918ம் ஆண்டு கியூபா சென்றார். அங்குள்ள வயல்களில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு அவர் எல்லிஸ் தீவு வழியாக அமெரிக்காவுக்கு வந்தார்.
அவர் லின்ச் மற்றும் கென்டுக்கி ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்களில் வேலை செய்தார். இறுதியாக அவர் நியூயார்க்கில் உள்ள நயாக்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று அங்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1934ம் ஆண்டு அவர் பேர்ல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
உலகின் வயதான மனிதராக கருதப்பட்ட ஜிரோமோன் கிமுரா கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து ஷார்ட்டி உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை அடைந்தார்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஷார்ட்டி நியூயார்க் அருகே உள்ள கிராண்ட் தீவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.
ஷார்ட்டி திருமணம் மற்றும் கிராமத்து கொண்டாட்டங்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.