முட்டாள்தனம்.. மதவழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கியை அகற்றுவதா? பாஜக மீது நிதிஷ்குமார் பாய்ச்சல்
லக்னோ: மதவழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகளை அகற்ற உத்தரவிடுவது முட்டாள்தனமானது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் ஒலி பெருக்கிகள் தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. ஆனாலும் இது குறித்த அரசாணையை வெளியிட்டது உ.பி. அரசு.
ஸ்பீக்கரில் தொழுகைக்கு அழைப்பு.. ஒலி மாசு செய்யாதீங்க..! கர்நாடகாவில் மசூதிகளுக்கு பரபர நோட்டீஸ்!
உ.பி.யில் கெடுபிடி
இந்த அரசாணை உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து உ.பி.யில் மதவழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 60,000க்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் மைக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனவும் உ.பி. அரசு எச்சரித்தது.
மகாராஷ்டிராவில் சர்ச்சை
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் வேறுவிதமாக விஸ்வரூபம் எடுத்தது. மகாராஷ்டிராவிலும் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்ற கெடு விதித்தது ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா. அத்துடன் மே 3-ந் தேதிக்குள் இந்த ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மசூதிகளில் அருகில் அனுமன் பக்தி பாடல்களை ஒலிபெருக்கிகளில் பாடவிடுவோம் என்றும் ராஜ்தாக்கரே எச்சரித்தார். இதனால் மகாராஷ்டிராவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தையும் மகாராஷ்டிரா அரசு கூட்டியது. ஆனால் இந்த கூட்டத்தைப் பாஜக புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளானது.
பீகார் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி
கர்நாடகாவில் மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளின் ஒலி அளவை குறைத்து வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதேபாணியில் பாஜக ஆளும் பீகார் மாநிலத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். பீகாரில் பாஜக-ஜேடியூ இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. ஜேடியூவை உடைத்து நிதிஷ்குமாரை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற பாஜக சதி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் இணக்கமான போக்கை நிதிஷ்குமார் கடைபிடித்து வருகிறார்.
முட்டாள்தனம் என சீறிய நிதிஷ்
இந்நிலையில் ஒலிபெருக்கிகளை அகற்றும் விவகாரத்தில் நிதிஷ்குமாருக்கு பாஜக தரப்பு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், மதவழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்ற சொல்வது முட்டாள்தனம். பீகாரில் எந்த ஒரு வழிபாட்டு தல விவகார்த்திலும் மாநில அரசு தலையிட்டது இல்லை. சிலருக்கு ஏதாவது பிரச்சனை செய்தாக வேண்டும்; இப்படி பிரச்சனை செய்வதுதான் அவர்களுக்க் ஒருவேலையாகவும் இருக்கிறது. இதை எல்லாம் ஏற்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.