உ.பியில் தொடரும் ஜாதி கொடூரம்.. இரும்பு ராடால் தாக்கிய ஆசிரியை.. பரிதாபமாக பலியான தலித் மாணவன்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் இரும்பு ராடால் தாக்கியதில் பட்டியலின மாணவன் உயிரிழந்துள்ளான்.
ராஜஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது உத்தரபிரதேசத்திலும் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
பொதுவாக, பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகின்றன.
காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.. 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி
ராஜஸ்தானில் அரங்கேறிய கொடுமை..
கடந்த மாதம் கூட ராஜஸ்தானில் இரண்டு தலித் மாணவர்கள் ஆசிரியர்கள் தாக்கியதில் உயிரிழந்தனர். அதில் ஒரு மாணவர், உயர் ஜாதியினர் அருந்தும் குடிநீர் பானையை தொட்டதால் அவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். மற்றொரு சம்பவத்தில், தேர்வு எழுதி முடிக்க தாமதமானதால் ஆசிரியரால் தாக்கப்பட்டு பட்டியலின மாணவர் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தின. மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து, போலீஸார் துரிதமாக செயல்பட்டு குற்றம்புரிந்த ஆசிரியர்களை கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
இந்த கொடுமையான நிகழ்வுகள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறுவதற்குள்ளாக, இன்னொரு பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிக்கித் தோஹ்ரே (16). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 2-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைத்தாள்களை 7-ம் தேதி ஆசிரியை அஷ்வினி சிங் (28) வழங்கினார். அப்போது, மாணவன் நிக்கித் தோஹ்ரே பல கேள்விகளுக்கு தவறான பதிலை எழுதி இருந்ததாக தெரிகிறது.
இரும்பு ராடால் தாக்குதல் - பலி..
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியரை அஷ்வினி சிங், மாணவன் நிக்கித் தோஹ்ரேவை கடுமையாக தாக்கியுள்ளார். முதலில் கையால் தாக்கிய அவர், பின்னர் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து மாணவனை சரமாரியாக அடித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவன் நிக்கித், மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
இதனால் பயந்துபோன ஆசிரியை, அந்த மாணவனை மற்ற ஆசிரியர்களின் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர் நிக்கித் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட ஆசிரியை அஷ்வினி சிங் தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து ஆசிரியை அஷ்வினி சிங்கை தேடி வருகின்றனர்.
வெடித்தது போராட்டம்
இதனிடையே, ஆசிரியை அஷ்வினி சிங்கை கைது செய்யக் கோரி மாணவர் நிக்த்தின் உறவினர்களும், பீம் ஆர்மி கட்சியினரும் அவுரியா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்கிருந்த சில வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாணவனின் உடலை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.