மதுரை அழகர் கோவிலில் பயங்கர தீ விபத்து.. ‘அதிர்ச்சி’ - உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த அமைச்சர், கலெக்டர்!
மதுரை : மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் எரிந்து சேதமாகின.
மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவில் பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் அணைக்க முடியாத நிலையில் தீ மளமளவென மேலும் பரவத் தொடங்கியது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றி போராடி தீயை அணைத்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திடீர் தீ
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறைகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

வெளியேற்றப்பட்ட பக்தர்கள்
இதனையடுத்து அருகில் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் வர சிறிது நேரம் தாமதமான நிலையில் அடுத்தடுத்த அறைகளுக்கு தீப்பரவ தொடங்கியது. கோவில் பணியாளர்கள் முதற்கட்டமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் அணைக்க முடியாத நிலையில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.

மின் கசிவு காரணமா?
தீ விபத்து காரணமாக அறையில் உள்ள புத்தகங்கள், சாமி படங்கள் கோவிலுக்கு சொந்தமான மரப்பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தொடர்ந்து மதுரை மற்றும் மேலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

உடனே சென்ற அமைச்சர் மூர்த்தி
பழமை வாய்ந்த கல் கட்டிட அறையில் தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடம் சேதமடையாமல் இருக்க கட்டிடத்தின் உஷ்ணத்தை குறைக்க தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகருடன் அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு, விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அதிகாரிகள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சர்ச்சை
புரட்டாசி சனிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்தது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் தீ தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையிலும் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications