மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது புதிய இந்தியாவின் புதிய சகாப்தம்.. தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை: மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பொறுப்பேற்றுள்ளது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என மகாராஷ்டிர மாநில முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற 17-வது லோக்சபா தேர்தலில், கடந்த முறை போலவே இந்த முறையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று அசத்தியது.
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே போல காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து இந்த தேர்தல்களில் களமிறங்கின.
ஆனால் பாஜக - சிவசேனா கூட்டணி அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று அசத்தியது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால், மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பெரிய தோல்வியை சந்தித்தது போலவே, மராட்டியத்திலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
தேர்தல் முடிவுகளை அடுத்து பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில், மோடியுடன் சேர்ந்து 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அவரவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பு வெளியானது.
உலகளவில் டிரென்டான நேசமணி.. இப்போது டீசர்டிலும்.. திருப்பூரில் தயாரிப்புகள் ஜரூர் #PrayforNeasamani
இந்நிலையில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மராட்டிய மாநில முதல்வர் பட்னாவிஸ், மோடி பிரதமராக பொறுப்பேற்ற நாள் இந்திய நாட்டிற்கும், பாஜக-விற்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக திகழ்வதாக கூறினார்.
மோடி அரசு பதவியேற்றதன் மூலம் இந்திய நாடு மீண்டும் வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களை காண உள்ளது. ஒருபுறம் இந்திய நாடு புதிய கண்ணோட்டம் மற்றும் உத்வேகத்துடன் முன்னேறி கொண்டிருக்கிறது.
மறுபுறம் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று அசூர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. இது புதிய இந்தியாவிற்கு புதிய சகாப்தத்தை உருவாக்கி தந்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள பட்னாவிஸ் பாஜக முதன் முதலில் தேர்தலை சந்தித்த போது வெறும் இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தற்போது 303 இடங்களை கைப்பற்றி அசாத்திய வளர்ச்சியை பறைசாற்றியுள்ளது. இதனை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாக மராட்டிய முதல்வர் கருத்து கூறியுள்ளார்.