மறுபடியும் ஓடி போகக் கூடாது.... எச் வசந்தகுமாருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வச்ச கொட்டு!
Recommended Video
நாகர்கோவில்: குமரியில் தோற்று ஓடிப்போன வசந்தகுமார், நாங்குநேரி மக்களை ஏமாற்றிவிட்டு இப்போது மீண்டும் பதவிக்காக குமரியில் போட்டியிடுவதாக பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
இன்று நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், "கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் வசந்தகுமார். இவர் கடந்தமுறை சொந்த மாவட்டத்தை விட்டு விட்டு நாங்குநேரியில் போய் சட்டமன்ற உறுப்பினராகினார். இப்போது அந்த தொகுதி மக்களை ஏமாற்றி விட்டு மீண்டும் பதவிக்காக குமரிக்கு வருகிறார்.
பணம் பதவி வாக்குகள் அனைத்தையும் பெற்று விட்டு நன்றி கூட சொல்லாமல் செல்வது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம். அந்த பாரம்பரியத்தில் வந்தவர் என்பதால் ஐந்து வருடம் உங்களுக்காக பணியாற்றுவேன் என கூறி வாக்குகளை பெற்று விட்டு இப்போது பதவிக்காக வாக்களித்த மக்களை ஏமாற்றி உள்ளார்.
குமரி மாவட்டத்தில் இது வரை எந்த அரசியல் பிரதிநிதிகளும் செய்யாத புது வித்தையை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் செய்து இப்போது குமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார், வெற்றியோ தோல்வியோ மக்கள் பணிக்காக வந்துவிட்டால் ஓடி போக கூடாது, தோல்வியை தழுவி ஓடி போய் மீண்டும் குமரியை தேடி வரும் வசந்த குமாருக்கு குமரி மக்கள் சரியான பதிலடியை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" இவ்வாறு கூறினார்.