ஆர்ஜேடியின் பிகே.. தேஜஸ்வி யாதவ் எனும் நட்சத்திரத்தை மெருகேற்றிக் கொடுத்த 'சஞ்சய் யாதவ்'
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சாதித்திருப்பதன் பின்னணியில் இருந்தது 36 வயதே ஆன சஞ்சய் யாதவ்தான்.
தேர்தல் அரசியல் வியூகங்கள் என்றால் பிரஷாந்த் கிஷோர்தான்.. அவருக்கு பல நூறு கோடிகள் கொடுத்து உதவியாக அரசியல் கட்சிகள் வைத்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் பிரஷாந்த் கிஷோர் தமது சொந்த மாநிலமான பீகார் தேர்தலில் எந்த சித்து வேலையும் காட்டாமல் அமைதியாக இருந்தார் என்றே கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அடுத்த தலைமுறை தலைவராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். 31 வயதே ஆன தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார் போன்ற பெரும் தலைவர்களுடன் மல்லுக்கட்டி ஆர்ஜேடியை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வைத்திருக்கிறார்.
சஞ்சய் யாதவ்
தேஜஸ்வி யாதவின் மாபெரும் இந்த பேரெழுச்சியின் பின்னால் இருப்பவர் யார் எனில் அனைவரது கைகளும் 36 வயதே ஆன இளைஞரான சஞ்சய் யாதவை நோக்கி நீள்கின்றன. 2013-ம் ஆண்டு கிரிக்கெட்தான் எதிர்காலம் கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டு அரசியலுக்குள் காலடி வைக்க விரும்பிய நாள் முதல் தேஜஸ்வியின் மூத்த சகோதரனாக கை கோர்த்தவர் சஞ்சய் யாதவ். லாலு பிரசாத் சிறையில் உள்ள நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுத்ததில் சஞ்சய் யாதவ் பங்கு பிரதானமானது.
லாலுவின் வாழ்த்து
இது தொடர்பாக ராஞ்சி சிறையில் ஜூன் மாதத்தில் சஞ்சய் யாதவ் சந்தித்து பேசினார். எப்படியெல்லாம் காய்கள் நகர்த்தினால் வெற்றிக்கனியை பறிக்கலாம் என அரசியலில் அத்தனை அம்சங்களையும் அறிந்த லாலுவிடம் விவரித்தார் சஞ்சய் யாதவ்... லாலுவுக்கும் நம்பிக்கை பிறந்தது.. சின்ன பையன்தானே என்றெல்லாம் முரண்டு காட்டாமல் வெற்றி நிச்சயம்... என வாழ்த்தி அனுப்பினார் லாலு. அப்போது இருந்து தேஜஸ்வி- சஞ்சய் ஆட்டம் சூடுபிடித்தது.
லாலு மீதான விமர்சனங்கள்
குறிப்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்ப அரசியல் மிகப் பெரிய சர்ச்சைக்குரியதானது. லாலுவின் அரசு தொடர்பான விமர்சனங்கள்தான் எதிர்க்கட்சிகளின் பேராயுதம். ஆனால் இந்த ஆகப் பெரும் தடைகளில் சிக்கிக் கொள்ளாமல் தேஜஸ்வி யாதவை லாவகமாக காப்பாற்றும் வியூகத்துக்கு பிரதான காரணியும் இந்த சஞ்சய் யாதவ்தான். பீகார் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என தேஜஸ்வி வீசிய அஸ்திரம் அவருக்கான பேராதரவு அலையை உருவாக்கியது.
தேசத்தின் இளந்தலைவர்
பீகாரில் மூத்த தலைவர்களுக்கு சளைக்காமல் இடைவிடாமல் சூறாவளியாக சுழன்று சுழன்று தேஜஸ்வி ஆக்கப்பூர்வமாக பிரசாரம் செய்த பாணிதான் அவர் பின்னால் பல லட்சம் இளைஞர்களை படையெடுக்க வைத்தது. இன்று பீகாரின் பிற்படுத்தப்பட்ட மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக தேஜஸ்வி எழுச்சி பெற்றிருக்கிறார். இந்திய அரசியலில் அடுத்த இளம் தலைவர் பட்டியலில் இணைந்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ். இத்தனை சிறப்புகளுக்கும் காரணகர்த்தாவாக வியூக வகுப்பாளராக இருந்தவர்தான் சஞ்சய் யாதவ்.