மத்தியில் எதிர்க்கட்சியின் கூட்டணி ஆட்சி அமைந்தால்.. இதை செய்வோம்.. நிதிஷ் குமார் போட்ட செம பிளான்!
பாட்னா: மத்தியில் பாஜனதாவுக்கு எதிரான எங்களின் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால், பின் தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருந்தாலும் தற்போதே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது.
வேலையை தொடங்கிய பாஜக.. அதிர்ச்சியில் நிதீஷ்! மாநில கிளையே 'ஜம்ப்’ -வெளி மாநிலங்களில் 'ஆபரேசன் தாமரை’
தீவிர ஆலோசனை
கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் வரும் தேர்தலிலாவது பிரதமர் மோடியை எப்படியாவது ஆட்சி அரியணையில் இருந்து அகற்றி விட வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தீவிர ஆலோசனையிலும் அரசியல் சதுரங்க நகர்த்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
நிதீஷ் குமார்
இந்தத் தலைவர்களுடன் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் இணைந்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியாக நிதிஷ் குமாரின் இந்த திடீர் மூவ் அமைந்தது.
கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய கையோடு, தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த வாரம் கூட நிதிஷ்குமார் டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் என முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகாருக்கே சென்று நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மட்டுமே தான் இருப்பதாகவும், தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இல்லை என்றும் கூறி வரும் நிதீஷ் குமார், எனினும் தொடர்ச்சியான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு நிதீஷ் குமாரின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் தேசிய அளவில் கவனம் பெற்று வரும் நிலையில், இன்று பாட்னாவில் பேசிய நிதீஷ் குமார், 'எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், பின் தங்கிய மாநிலங்களுக்கு கண்டிப்பாக நாங்கள் சிறப்பு அந்தஸ்து கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
பீகாரை பற்றி மட்டும் பேசவில்லை
இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பதிலளித்து நிதீஷ் குமார் கூறுகையில், ''எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், பின் தங்கிய மாநிலங்களுக்கு கண்டிப்பாக நாங்கள் சிறப்பு அந்தஸ்து கொடுப்போம். நான் பீகாரை பற்றி மட்டும் பேசவில்லை. பிற மாநிலங்கள் குறித்தும் தான் பேசுகிறேன். அந்த மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்'' என்றார்.
சிறப்பு அந்தஸ்து விவகாரம்
நிதிஷ் குமார் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுப்பது இது முதல் தடவை அல்ல. கடந்த 2007- ஆம் ஆண்டே பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை நிதீஷ் குமார் முன்வைத்து இருக்கிறார். ஆனால், தேர்தலுக்கு முன்பு அல்லது பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க என மிகவும் சாதுர்யமாக இந்த கோஷத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சி பயன்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நிதீஷ் குமார் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
11 மாநிலங்கள்
ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டால், மத்திய அரசின் திட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் நிதி பகிர்வு விகிதமானது 90:10 என்ற அளவில் இருக்கும். அதாவது பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மத்திய அரசின் நிதி அதிக அளவில் ஒதுக்கப்படும். தற்போது, நாட்டில் சிறப்பு வகை பிரிவில் 11 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர்(யூனியன் பிரதேசம்,) மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ஆகும்.
திட்ட கமிஷன்
அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கான சிறப்புப் பிரிவுகள் வரையறுப்பது பற்றி எந்த அம்சமும் இல்லை. எனினும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த 11 மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்க திட்டக் கமிஷன் பரிந்துரைத்தது