தமிழகத்திற்கு என்ன செய்தார் ராம்விலாஸ் பாஸ்வான்..? தயக்கமோ.. தாமதமோமின்றி.. தாராளம் காட்டியவர்..!
பாட்னா: சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட்டதோடு மட்டுமல்லாமல் அதன் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியவர் ராம் விலாஸ் பாஸ்வான்.
கடந்த 2001- 2004 இடையே மத்திய எஃக்குத் துறைஅமைச்சராக அவர் பதவி வகித்த போது செய்த இந்த உதவியால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகவாகவும் சேலத்தில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னை சந்திக்க விரும்பினால் அடுத்த அரை மணி நேரத்தில் நேரம் கொடுத்து நேரில் சந்திக்கக்கூடியவர்.
கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ராம் விலாஸ் பாஸ்வான் பதவி வகித்த போது தான், சென்னையின் புதிய அடையாளமாக டைடல் பார்க் நிறுவப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறை இன்று அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதற்கான விதையை தூவியவர் ராம் விலாஸ் பாஸ்வான்.
மற்ற மாநிலங்களை விட இயல்பாகவே தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் நேசம் கொண்டிருந்தவர் பாஸ்வான். இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வைக் கூட கூறலாம். நாடு முழுவதும் கடும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தனது நீண்ட நெடிய அனுபவத்தால் நெருக்கடியை சமாளித்தார் பாஸ்வான்.
மேலும், அப்போது மத்திய தொகுப்பில் இருந்து 20,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழகத்திற்கு கொடுத்து உதவினார் மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான். இதன் பின்னரே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 60 ரூபாய் 40 ரூபாய் என படிபடியாக குறைந்தது.
யார் இந்த ராம்விலாஸ்... அரசியல் பின்னணி... இந்திரா காந்தியை எதிர்த்தவர்!!
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு குறித்து அவருடன் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் பணியாற்றி வரும் தஞ்சை மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது, ''ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற ஒரு தலித் தலைவரை இனி இந்த தேசம் பார்க்க முடியாது. மிக மிக எளிமையான மனிதர். அவர் மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட சாமானியர்கள் கூட கோரிக்கை மனுக்களை எடுத்துக்கொண்டு சென்று அவரை சந்திக்க முடியும்.''
''அப்படி ஒரு அற்புதமான மனிதர். 40 ஆண்டுகாலம் அவர் நாடாளுமன்றவாதியாக இந்தியாவுக்கு செய்துள்ள பணிகள் ஏராளம். ராம் விலாஸ் பாஸ்வானை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நாடு முழுவதும் அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். காரணம் எல்லோரிடமும் அன்புக்காட்டுபவர் என்பதுடன் கோரிக்கைகளை சலிக்காமல் செய்து கொடுப்பவர் பாஸ்வான்'' என தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.