ஆ.ராசாவுக்கு ஆதரவாக வந்த தபெதிக ! பாஜகவுடன் திடீரென மூண்ட மோதல் ! கலவர காடான புதுச்சேரி !
புதுச்சேரி : இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் மனு தர்ம சாஸ்திர நகலை எரிக்க முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவைச் சேர்ந்தவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான அ ராசா இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக தமிழக முழுவதும் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஆ.ராசாவுக்கு எதிராக போஸ்டர்கள், போராட்டங்கள், காவல் நிலையங்களில் புகார் என எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ஆ.ராசாவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மனு சாஸ்திர நூலில் இருப்பதையே ஆ.ராசா பேசியுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

ஆ.ராசா
இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்." என பேசியிருந்த நிலையில் மனு சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை தான் ஆ.ராசா பேசியிருக்கிறார் எனில் அவர் மீது தான் தவறு என திக, தபெதிக உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றனர்.

மனுதர்ம சாஸ்திர நகல்
இந்நிலையில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக புதுச்சேரியில் மனு தர்ம சாஸ்திர நகலை எரிக்க முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, காமராஜர் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுதர்ம நகல் எதிர்ப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருந்தனர்.

பாஜக - தபெதிக மோதல்
மேலும் நகல் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பாஜகாவை சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் அவ்வை திடலில் இருந்து காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர். அப்போது தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்ற காமராஜர் சிலை அருகே இந்து முன்னணியினர், பாஜகவினர் கடக்க முயன்ற போது இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

சரமாரி தாக்குதல்
மேலும் ஒருவரை ஒருவர் செருப்பு, கற்கள், பிளாஸ்டிக் வாலி உள்ளிட்டவற்றை வீசி தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு காவலர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது தொடர்ந்து மோதல் போக்கை கட்டுப்படுத்தும் வகையில் 50 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications