புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸை விட அதிவேகமாக பரவக் கூடியது இந்த 30 முறை உருமாறிய கொரோனா வைரஸ். இதனை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவது மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரு தவணை தடுப்பூசி- விரைவில் 100 சதவீதம்?
கொரோனா தடுப்பூசி எச்சரிக்கை
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதுச்சேரி அரசும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 100% கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி கொரோனா தடுப்பூசி
புதுச்சேரியில் இதுவரை முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை 7,70,000 பேரும் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை 4,48,000 பேரும் போட்டுள்ளனர். அதாவது மொத்தம் 77% பேர் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஶ்ரீராமுலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுவையில் சட்ட நடவடிக்கை
அந்த அறிக்கையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுகிற நபர்கள் மீது புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54(1)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீராமுலு எச்சரித்துள்ளார். இந்த உத்தரவு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உடனே அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என புதுச்சேரி அரசு எதிர்பார்க்கிறது.
ஓமிக்ரான் முன்னெச்சரிக்கை
மேலும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரி வருபவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; புதுச்சேரிக்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டிருக்கின்றனரா; அவர்களது உடலின் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும்; புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.