புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருளால் வீடுகள் தரைமட்டமானது மட்டுமின்றி அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பது போன்று ஒரு கிலோ மீட்டர் வரை கேட்ட சத்தத்தால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடி வந்தனர். மர்மப் பொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரளயம் வர போகிறதாம்.. 3 மாதத்தில் அந்த பயங்கரம் வருமாம்.. லிப்ஸ்டிக்குடன் ஆருடம் சொன்ன பெண்சாமியார்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மப் பொருள் வெடிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு ஏதாவது பதுக்கி வைத்திருந்தார்களா, அல்லது பட்டாசுகள் ஏதேனும் வெடித்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டு வெடித்தது போல் சப்தம்
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியரான ஜெய்சங்கர் என்பவர் மனைவி எழிலரசி, மகளுடன் வசித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை ஜெய்சங்கர் கடைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சுமார் 6.30 மணியளவில் ஜெய்சங்கர் வீட்டின் முன்புறம் பயங்கர சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து தரைமட்டமானது.
தாய், மகள் உள்பட 3 பேர் காயம்
இந்த சம்பவத்தின் எதிரொலியாக இவர்கள் வீட்டின் அருகில் இருந்த காய்கறி வியாபாரி ஜேழதி என்பவர் உள்ளிட்ட வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. குண்டு வெடிப்பது போல் ஏற்பட்ட சப்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடி வந்தனர். பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஜெய்சங்கரின் மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் தீக்காயங்களுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமின்றி பக்கத்து வீட்டில் வசித்து வரும் சீனிவாசன் என்பவரின் மனைவி ஜோதியும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீயணைப்புத்துறை விரைவு
சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அப்பகுதியில் வசிக்கும் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணிகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். யார் வீட்டிலும் சிலிண்டர் வெடிக்காததால் ஒருவேளை குண்டு வெடித்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அல்லது அருகில் யார் வீட்டிலாவது அனுமதியின்றி பட்டாசு, நாட்டுவெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய ஃபிரிட்ஜ் வெடித்தது?
ஜெய்சங்கரின் பக்கத்து வீட்டில் பா.ஜ.க வை சேர்ந்த சுரேஷ் அலுவலகம் வைத்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்னர் பட்டாசுகள் வெடித்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அதில் ஏதேனும் மீதமுள்ள பட்டாசுகளை அலுவலகத்தில் வைத்திருந்து அவை வெடித்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எழிலரசியிடம் விசாரித்தபோது, அவர்கள் வீட்டில் புதிய பிரிட்ஜ் வாங்கி உள்ளதாகவும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பணியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு முன்பே ஆன் செய்ததால் எதிர்பாராத விதமாக ஃபிரிட்ஜ் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடமும் காவல்துறை விசாரித்து வருகிறது.