சுழற்சி முறையில் அமைச்சர் பதவி... ஏற்க மறுத்ததால் தூக்கி எறிந்த பாஜக... புலம்பும் புதுவை ஜான்குமார்
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி தரப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு கடைசி நேரத்தில் பாஜக மேலிடம் மறுத்துவிட்டதாக புலம்பி வருகிறார் அக்கட்சியின் ஜான்குமார் எம்.எல்.ஏ.
புதுச்சேரியில் முந்தைய நாராயணசாமி அரசை கவிழ்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஜான்குமார் முக்கியமானவர். சட்டசபை தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார்.
ஜான்குமார், அவரது மகன் விவிலின் ரிச்சர்ஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதியில் மகன் விவிலின் ரிச்சர்ஸ் வெற்றி பெற்றனர்.

பாஜகவுக்கு 2 அமைச்சர்கள்
புதுச்சேரி தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைத்துள்ளது. பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் பதவியும் சபாநாயகர் பதவியும் மட்டுமே தரப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துவிட்டார்.

முதலில் ஜான்குமாருக்கு வாய்ப்பு
இதனால் புதுவையில் பாஜக எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர் பதவிகளுக்காக முட்டி மோதினர். இதில் கட்சி தாவி வந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என டெல்லி மேலிடம் கூறியதாம். ஆனால் திடீரென மறுத்துவிட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவாளர்கள் நேற்று புதுவை பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.

ஜான்குமார் அதிர்ச்சி
இது தொடர்பாக ஜான்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் டெல்லி மேலிடம் அமைச்சர் பதவி உங்களுக்குதான் என கூறியது. சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறியது. இதனால் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்திருந்தேன்.

ஓராண்டு பிளஸ் 4 ஆண்டுகள்
ஆனால் திடீரென இப்போது கட்சியில் நீண்டகாலம் இருக்கும் சாய் சரவணகுமார் முதலில் ஓராண்டு அமைச்சராக இருப்பார்; அவர் ராஜினாமா செய்த பின்னர் நீங்களே 4 ஆண்டுகள் அமைச்சராக இருங்கள் என டெல்லி தலைவர்கள் பேசுகின்றனர். என்னால் இதனை ஏற்க முடியாது என கூறிவிட்டேன்.

பாஜக ஏமாற்றியதாக புலம்பல்
மேலும் முதலில் நான் 6 மாதம் அமைச்சராக இருக்கிறேன்; பின் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அதனையடுத்து சாய் சரவணகுமாரை அமைச்சராக்குங்கள் என்றேன். ஆனால் இதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. பேசாமல் என்.ஆர். காங்கிரஸுக்கு போயிருந்தாலாவது அமைச்சர் பதவி உறுதியாக கிடைத்திருக்கும் என்கிறார்.

ஜாதக நம்பிக்கைதானாம்
இது தொடர்பாக புதுவை பாஜக நிர்வாகிகளிடம் பேசிய போது, இதற்கு காரணமே முதல்வர் ரங்கசாமியின் ஜாதக நம்பிக்கைதான். தன் கட்சிக்காரர்கள், பாஜகவினர் என அமைச்சராக வாய்ப்புள்ளவர்களின் ஜாதகங்களை பார்த்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. அதில் ஜான்குமார் ஜாதகம் சரியில்லை என கூறியிருக்கிறார். இதனால் டெல்லி மேலிடமும் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications