சென்னை ஜிஎஸ்டி சாலையில் உருண்டோடிய மனித தலை.. அலறியடித்து ஓடிய மக்கள்
Recommended Video

சென்னை: காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் துண்டிக்கப்பட்ட மனித தலை திடீரென உருண்டோடியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 75 ரவுடிகள் ஒன்றாக கைது செய்யப்பட்டனர்.
அந்த ரவுடிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சென்னையில் வழிப்பறி, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

சாலையில் உருண்ட மனித தலை
இந்நிலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் நேற்று திடீரென துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று உருண்டு ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சாலையில்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியை அடுத்துள்ளது காட்டாங்கொளத்தூர். காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அலறியடித்து ஓடிய மக்கள்
அப்போது அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட மனிதனின் தலை ஒன்று சாலையில் வீசப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

பிளாஸ்டிக் கவரில்
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தின் வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் பிளாஸ்டிக் கவர் ஒன்றை சாலையில் வீசி சென்றுள்ளனர்.

வீசிய வேகத்தில்
அவர்கள் அந்த கவரை வீசி சென்ற வேகத்தில் அதில் இருந்து தலை ஒன்று உருண்டு வெளியே ஓடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கஞ்சா வியாபாரி பாலாஜி
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வீசப்பட்ட மனித தலையை கைப்பற்றினர். அது கோனாதி கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாலாஜி என்பவரின் தலை என தெரியவந்துள்ளது.

உடல் எங்கே?
அவரது உடல் எங்கே இருக்கிறது என போலீஸார் தேடி வருகின்றனர். தலைநகரில் தொடரும் கொலை மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications