கத்திரிவெயில் காலம் நாளையுடன் ஓவர்… பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்பு
சென்னை: கடந்த 25 நாள்களாக மக்களை சுட்டெரித்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.
கோடை வெயில் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி வாட்டி எடுத்தது. கடந்த 4-ந்தேதி அக்னி வெயில் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையானது. தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் சற்று தனிந்து இருந்தது.
அதன் பிறகு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
கத்திரி வெயில் முடிவுக்கு வரும் நிலையிலும் அனைத்து மாவட்டங்களிலும் அனல் காற்றுடன் வெப்பம் வாட்டிவருகிறது..
சதமடித்த வெயில்
திங்கட்கிழமையன்று சென்னை, மதுரை, கரூர், பரமத்தி, திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை ஆகிய 6 இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
கத்திரி ஓவர்
சுட்டெரிக்கும் அக்னி வெயில் நாளையுடன் முடிகிறது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப்படியாக குறையும்.
தஞ்சையில் மழை
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தஞ்சையில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்தது. இரவு 12 மணியளவில் லேசான தூறலாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக மாறியது.
சூறைக்காற்றோடு மழை
மேலும் சூறை காற்றும் வீசியது. இதனால் ஒரு சில வீடுகளில் இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் தூறல் நீடித்தது.
மீனவர்கள் லீவ்
இதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் பலத்த சூறை காற்று வீசியது. இந்த சூறை காற்றுக்கு படகு கவிழ்ந்தது. அதில் மீன் பிடிக்க சென்ற தன்ராஜ், கண்ணன் ஆகியோரை சக மீனவர்கள் மீட்டனர்.
தொடர்ந்து சூறை காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை
நாகை - திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், வேதாரண்யம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லேசான மழை நீடித்தது. அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் மழை பெய்துள்ளது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தொடங்கும் பருவமழை
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். நாட்டின் 75 சதவீத மழை பொழிவு தென் மேற்கு பருவமழை காலத்தை நம்பியே உள்ளது.
அந்தமானில் மழை
ஆண்டு தோறும் மே 20-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே கடந்த 18-ந்தேதியே தொடங்கிவிட்டது.
தென்மேற்குப் பருவமழை
இதன் தொடர்ச்சியாக கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.