ஜெயலலிதா வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஆக.29ல் தேர்தல்
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது. போட்டியிட விரும்புவோர் வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மனு செய்யலாம் என அ.தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து அப்பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் கமிஷனின் விதிக்கு உட்பட்டு அப்பதவிக்கு வருகிற 29ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக விதிகளின்படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2013 ஆம் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப்பட்டன. ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் சேர்த்தனர்.
கட்சி விதிகளின்படி, அதிமுக பொதுச்செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கிளைக் கழகங்களின் அடிப்படை உறுப்பினர்களாலும், அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களின் கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு உறுப்பினர் உரிமைச் சீட்டுக்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.