ஜெயலலிதா நலனுக்காக நான்கு மணி நேர தொடர் துர்க்கா பூஜை: அதிமுக எம்.எல்.ஏக்கள் நடத்தினர்
புதுச்சேரி: முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி புதுச்சேரியில் 4 மணி நேர துர்கா ஹோமத்தை நடத்தியுள்ளனர் அம்மாநில அதிமுக எம்.எல்.ஏக்கள். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த ஹோமம் நடத்தப்பட்டுள்ளதால் வழக்கில் வெற்றி கிடைக்க வேண்டி இப்பூஜை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்புவழக்கு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் சனிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் என்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
துர்க்கா ஹோமம்
இந்நிலையில் புதுச்சேரி அதிமுக கமிட்டி செயலாளரும் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன் தலைமையில் அம்மாநிலத்தின் மொத்தமுள்ள 5 எம்.எல்.ஏக்களும் இணைந்து ஜெயலலிதா நலனுக்காக, ஸ்ரீ துர்க்கா ஹோமம் நடத்த முடிவு செய்தனர்.
நான்கு மணி நேரம் நடந்தது
இதன்படி நேற்று தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு இந்த ஹோமம் நடத்தப்பட்டது. இதற்காக பெரிய யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.
51 வேத பண்டிதர்கள்
கருவாடிகுப்பம் பகுதியிலுள்ள வேத பாடசாலையை சேர்ந்த 51 வேத விற்பன்னர்கள் இந்த ஹோமத்தை நடத்தியுள்ளனர். புருஷோத்தமன் தவிர, அன்பழகன், பாஸ்கர், ஓம் சக்தி சேகர் மற்றும் பெரியசாமி ஆகியோர் ஹோமத்தில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏக்களாகும்.