நாடு முழுவதும் நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்... இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என தகவல்
சென்னை: மத்திய அரசின் புதிய சாலை போக்குவரத்து சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (02-09-2015) நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு மோட்டார் வாகன சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் 2015 என்ற புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பாக செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு குழுவினர் சார்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசு போக்குவரத்து கழகங்களே இருக்காது என்று தெரிவித்தார்.
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டிய சண்முகம் இந்த சட்டத்தினால் சாலை போக்குவரத்துடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படவர்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தொமுச உள்ளிட்ட 11 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்த சண்முகம் மெக்கானிக்குகள், ஓட்டுனர் பயிற்சி மையத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். இந்த வேலை நிறத்தத்தின் போது பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், கார் டாக்சிகள் இயங்காது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்தால் நாளை, (02-09-2015) தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.