பூவரசன்கொளத்துலருந்து பொன்னாத்தா பேசுறேன்யா... ஏஞ்சாபம் ஒங்கள சும்மா விடாது!
எங்க நாட்டு ராசாவே
நான்
பூவரசன்கொளத்துலருந்து
பொன்னாத்தா பேசுறேன்யா...
என்னய்யா...
செய்யச் சொல்றீக....
எங்களை
என்னய்யா...
செய்யச் சொல்றீக....
எல்லாத்துக்கும்
கட்டாய
அக்கவுண்டு.
வெத்தல பாக்கு வாங்க
டெபிட் கார்டு.
வெளக்கு வைக்க
எண்ணெய் வாங்க
கிரெடிட் கார்டு.
டவுண் பஸ்ல
பேத்தி வீட்டுக்கு போக
ஆன்லைன் பேங்கிங்.
சுடுகாட்டுக்கு போறப்போ
ஐஎப்எஸ்சி நம்பர்...
வயித்துப்பசிக்கு
கே.எப்.சி.
காப்பித்தண்ணிக்கு
காபி டே.
கார்டை தூக்கிக்கிட்டு
எங்களை
கடை கடையா
போகச் சொல்றீயளா?
கீரைக்காரம்மாவும்
பால்காரம்மாவும்
பழைய இரும்புத்தவரத்துக்கு
பேரிச்சம்பழம் விற்கிறவரும்
உழைச்ச காச
ஓடோடிப்போயி
பேங்க்ல போட்ரணும்னு
சொல்றீக...
திரும்பக் கேட்டா
கணக்கு வச்சி தர்றீக
காத்திருக்கச் சொல்றீக
நாத்து நட்டதுக்கும்
களை பறிச்சதுக்கும்
அஞ்சாறு ஆடு வளத்து
புழுக்க சேர்த்து
உரமா அதை அள்ளி
புஞ்சைக்கும் நஞ்சைக்கும்
போட்ட ரூவா
எம்புட்டுன்னு
நாட்டுக்கு கணக்கு
சொல்லியே ஆகணும்ங்றீ்க
சுருக்குப் பைக்குள்ளயோ
பக்கரைக்குள்ளயோ
அரிசிப் பானைக்குள்ளயோ
அலமாரிலயோ
முந்தானையிலயோ
அண்ட்ராயருக்குள்ளயோ
அந்த கார்டு, இந்த கார்டு
ஆதார் கார்டுன்னு
50 கார்டை பத்திரப்படுத்த
பழகிக்க சொல்றீக
வெள்ளியிலயும்
தங்கத்திலயும்
பேர் எழுதுன
இலட்ச ரூவா சட்டை
நாளுக்கொண்ணு போட்டுக்கிட்டு
100 ரூவாயயும்
200 ரூவாயயும்
நாட்டுக்காக விட்டுக்கொடுங்கன்னு
கேக்குறீக...
100 பேருக்காக
120 கோடி பேரும்
100 நாட்கள்
பொறுத்துக்கங்கன்னு
பொறுப்பா சொல்றீக
உங்களுக்கும்
நாட்டுப்பற்று
இருக்குன்னு காட்டிப்புடணும்னு
சொல்றீக.
கறுப்புப்பணம்
பச்சைப்பணம்
மஞ்சைப்பணம்
சிவப்புப்பணம்
வானவில் கலர் பணம்
எல்லாத்தையும்
நாங்க மீட்டே தீருவோம்னு
நம்பிக்கையா சொல்றீக
நம்பச்சொல்றீக
ஆனா...
ஒண்ணே ஒண்ணு
நாங் கொஞ்சம் கொஞ்சமா
குருவி மாதிரி சேர்த்து வச்சிருக்கிற
வெள்ளைப்பணம் பூராத்தையும்
கேள்வி கேக்காம
பேங்க்ல கட்டிரணும்னு சொன்னீக...
கட்டிட்டேன் சாமீ.
அஞ்சும் பத்துமா சேத்ததுக்கு
அக்கவுண்ட் எதுக்கு?
ஆதாரந்தான் எதுக்கய்யா?
இன்கம்னா என்னன்னே
தெரியாத எங்ககிட்ட
டேக்சு பத்தி பேசுறீய
மாற்றம்
முன்னேற்றம்னு
செராக்ஸ் கடைக்கு
அலையவச்சே
எங்களை செக்கிழுத்த
செம்மல் ஆக்கிட்டீக.
நல்லா இருப்பீக...
இனிமே என்னத்தையும்
கேட்ராதீக...
கடைசிக் காலத்துல
காடு கரையிலயோ
வாய்க்கா வரப்பிலயோ
வீட்டுத் திண்ணையிலயோ
வசதியா கால் நீட்டி
சாஞ்சி கெடக்கிறப்போ
போக வேண்டிய உசுர
பேங்க் வாசல்ல
போக வச்சிராதீய.
இந்த கட்ட வேகாது.
ஏஞ் சாபம் ஒங்கள
சும்மா விடாது!
- முருகன் மந்திரம்
திரைப்பட பாடலாசிரியர்