அன்புமணி அந்த 'லக்கேஜை' இறக்கி வைக்காத வரை வெற்றி பெறுவது கஷ்டம்: பொன்ராஜ்
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி அந்த லக்கேஜை இறக்கி வைக்காத வரை அவர் வெற்றி பெறுவது கடினம் என அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியின் முதன்மை வழிகாட்டியான வி. பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியின் முதன்மை வழிகாட்டியான வி. பொன்ராஜ் தங்களை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இந்நிலையில் அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா
அதிமுக ஆட்சியில் இளைஞர்கள் வேலையின்றி தெருத்தெருவாக அலைகிறார்கள். பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்பது அதிமுக ஆட்சியில் நடக்கவே நடக்காது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 32 ஆயிரம் கோடிக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்துறையில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு நஷ்டம். காற்றாலை ஒப்பந்தம் மூலம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி இழப்பு. ஆக மொத்தம் ஜெயலலிதா ஆட்சி பூஜ்ஜியம்.
அரசியல் கட்சி
தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் மக்களை கண்டுகொள்ளாமல் தங்களை வளர்த்துக் கொண்டன. நாங்கள் அப்துல் கலாமின் கனவை நனவாக்க கட்சி துவங்கியுள்ளோம். இந்தியாவையும், தமிழகத்தையும் வல்லரசாக்கிப் பார்க்க கட்சி துவங்கியுள்ளோம். கலாமை போன்று இளைஞர்களை சந்தித்து எங்கள் கட்சியின் நோக்கங்களை எடுத்துக் கூறுவோம்.
ஆட்சி
கட்சி துவங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஆட்சியை பிடிக்க நினைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். பாஜக, திமுக, அதிமுக என தோல்விகளை காணாத கட்சிகளே இல்லை. எங்களுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைத்துவிட்டால் ஆட்சியை பிடித்துவிடுவோம்.
பண பலம்
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடம் பணம் பலம் இருக்கலாம். ஆனால் மக்கள் பணத்திற்காக வாக்களித்திருந்தால் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக அல்லவா வெற்றி பெற்றிருக்கும். எங்களிடம் பண பலம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மன பலம் உள்ளது.
அன்புமணி
பாமக கூறும் கருத்துகள் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அக்கட்சியின் கடந்த கால வரலாறு அவர்களுக்கு தடையாக உள்ளது. அன்புமணிக்கு பின்னால் ஒரு லக்கேஜ் இருக்கிறது. அதை இறக்கி வைக்க அவரும் பல முறை முயற்சித்து வருகிறார் முடியவில்லை. அந்த லக்கேஜை அவர் இறக்கி வைக்காத வரை அவருக்கு வெற்றி என்பது நீரின் மேல் உள்ள எழுத்தாகவே இருக்கும்.
மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்ணி-தேமுதிக சேர்ந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி ஆகும். கூட்டணி ஆட்சி என்ற தத்துவத்தை முன்வைத்துள்ள அவர்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி
அசுரத்தனமாக உழைப்பவர் கருணாநிதி. அந்த உழைப்பு அவரிடம் பிடித்த விஷயம் ஆகும். 93 வயதிலும் கட்சி பணி செய்கிறார். ஆளுங்கட்சியை கேள்வி கேட்கிறார், கட்டுரை எழுதுகிறார், அறிக்கை வெளியிடுகிறார். அவர் உழைப்பின் சிகரம் ஆவார்.
மோடி
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளபோதிலும் அது சரியாக செயல்படவில்லை. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை அழகாக செயல்படுத்த முடிந்தது. ஆனால் பிரதமராக இருக்கையில் அவரால் நல்ல திட்டங்களை சிந்திக்க முடிகிற போதிலும் செயல்படுத்த முடியவில்லை.
மது விலக்கு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு குறித்த ஆவணத்தில் தான் என்று கூறுபவர்களை நம்பக் கூடாது. அவர்கள் ஏமாற்றுகிறார்கள். உடனே எல்லாம் மது விலக்கை அமல்படுத்த முடியாது. எங்கள் நோக்கமும் மது விலக்கை அமல்படுத்துவது தான். ஆனால் அதை படிப்படியாக செய்வோம். உடனே மது விலக்கை அமல்படுத்துவதாக கூறுவது நம்மை முட்டாளாக்க பார்க்கும் வேலை.