தேவிப்பட்டனம் கோவிலில் போதையில் இருந்த அர்ச்சகர் சஸ்பெண்ட்.. அதிமுககாரர்!
தேவிப்பட்டனம், ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டனத்தில் உள்ள பிரபல நவபாஷான தல கோவிலில் பணியின்போது மது போதையில் இருந்ததாக அர்ச்சகர் செளந்தர்ராஜன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணியில் செயலாளராக வேறு இருக்கிறார். மேலும் நவபாஷான அர்ச்சகர் சங்கத்திலும் இவர் ஒரு உறுப்பினர் ஆவார்.
நேற்று முன்தினம் தேவிபட்டினம் நவபாஷன தலத்தில் குடிபோதையில், பக்தர்களிடம் தோஷ பரிகாரங்கள் குறித்து விளக்கியுள்ளார். இதனால் பக்தர்கள் முகம் சுளித்தனர். உடனடியாக அர்ச்சகர் சங்கத்தில் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சங்கக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் செளந்தர்ராஜனை சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், புண்ணிய தலமான நவபாஷனத்தில் அர்ச்சகர்கள் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். செளந்தர்ராஜன் செயலால் சங்கத்திற்கும், பிற அர்ச்சகர்களுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இவரை, சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்றார்.
இப்படித்தான் இதே தேவிப்பட்டினத்தில் சமீபத்தில், திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் பக்தரிடம் பரிகார தோஷம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார் ஜெயலலிதா பேரவையைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர். இப்போது மது போதையில் பரிகாஷ தோஷம் குறித்து விளக்கிப் பேசி சஸ்பெண்ட் ஆயுள்ளார் அர்ச்சகர் செளந்தர்ராஜன்.