ஜெயலலிதா மரண விசாரணை காலதாமதம்... மர்மம் எப்போது விலகும்?
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை மேலும் காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து இன்றுமுதல் விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணை மேலும் காலதாமதமாகிறது.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் இருந்து விசாரணையை தொடங்குகிறார் ஆறுமுகசாமி. இது சசிகலா குடும்பத்திற்கு எதிரான விசாரணைதான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். பிளவுபட்டிருந்த அணிகள் இணைந்த பின்னர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

சேப்பாக்கத்தில் விசாரணை அலுவலகம்
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின்பேரில், விசாரணை அறைக்குள் நடக்கும் உரையாடல்கள் வெளியில் கேட்காத அளவுக்கு, திரையரங்குகளில் உள்ள கட்டமைப்புபோல அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

போயஸ்கார்டனில் விசாரணை
கடந்த சில தினங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி, வெளிப்படையான விசாரணை நடக்கும் என்றார். தனது விசாரணையை முதலில் போயஸ் கார்டனில் இருந்து இருந்து தொடங்கப் போகிறார் ஆறுமுகசாமி.

தெரிந்த தகவல்கள்
அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிட்ட அறிக்கையில் , ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மறைந்த நாள்வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்புடையவர்களும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கலாம்.

தபால் மூலமும் கூறலாம்
சத்திய பிரமாண உறுதிமொழி பத்திரப்படிவில் (1+2 நகல்களுடன்) தகுந்த ஆவணங்களுடன் நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், முதல் தளம், கலச மகால் புராதனக் கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்திடம், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யார் யாரிடம் விசாணை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை குறித்தும் நிலைமை குறித்தும் அறிந்தவர்களும் விசாரணை ஆணையத்தின் முன் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை குழுவினர், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், சிங்கப்பூர் மருத்துவர்கள், அமைச்சர்கள் என ஒருவர் விடாமல் அனைவருமே விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

அதிர்வலைகளை உருவாக்கும் அறிக்கை
ஏற்கனவே காலதாமதமாகியுள்ள நிலையில் மீண்டும் விசாரணை காலதாமதமாகியுள்ளது. ஆறுமுகசாமி அனுப்பியுள்ள நோட்டீஸ்க்கு 15 பேரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை தொடங்கும். தாமதமாகத் தொடங்கப்படும் விசாரணை ஆணையத்தால், குறிப்பிட்ட டிசம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரண மர்மம் விலகுமா?
விசாரணை முடிவில் நீதிபதி ஆறுமுகசாமி இறுதியாக அளிக்கும் அறிக்கை நாடு தழுவி பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் 75 நாட்கள் அப்பல்லோ சிகிச்சையும், அவரது மரணமும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மத்தை உடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications