மது விலக்கு போராட்டம், இளங்கோவன் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை கூடும் சட்டசபை.. புயல் வீசுமா?
சென்னை: மது விலக்கு கோரி நடந்து வரும் போராட்டங்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அதிமுகவினரின் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. சட்டசபைக் கூட்டத்தில் அமளிக்குப் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் (விஜயகாந்த்தைத் தவிர) அனைவரும் தடை செய்யப்பட்ட நிலையில் நாளை சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது.
பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் காத்துள்ளன. இதனால் பல வெளிநடப்புகள், அமளிதுமளிகளுக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு
தமிழக சட்டசபையின் கூட்டம் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. 19 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
அப்துல் கலாமுக்கு அஞ்சலி
முதல் நாளான நாளை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவித்து நாளை சபை ஒத்திவைக்கப்படும்.
2வது நாள் கூட்டம்
அடுத்து 25ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் வீட்டு வசதி, வேளாண்மைத்துறை ஆகிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
தேமுதிக மிஸ்
இந்தக் கூட்டத்தில் தேமுதிக உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. விஜயகாந்த் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் அவர் வருவாரா என்று தெரியவில்லை.
பிரச்சினைகள் பலவிதம்
மது விலக்கு கோரி நடந்து வரும் போராட்டங்களை காவல்துறை ஒடுக்குவது, அதேசமயம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று தெரிகிறது.
சென்னை குடிநீர்ப் பிரச்சினை
சென்னையில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளை சபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் காத்துள்ளன.
பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது
மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே பரபரப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.