ஸ்டிரைக் வாபஸ்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடும்
சென்னை: சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த வேலை நிறுத்தப்போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல ஆட்டோக்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மீட்டர் போடாமல் ஓடிய ஆட்டோக்கள் மீது போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் மீட்டர் போடாமல் ஓடிய 3000 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 தொழிற்சங்கத்தினர் அழைப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 தொழிற்சங்கத்தினர் இணைந்து நாளை ஆட்டோ ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் கருணா சாகர், இணை கமிஷனர்கள் வரதராஜு, தினகரன், அருண், ஸ்ரீதர், சங்கர்,சண்முகவேல், திருஞானம், துணை கமிஷனர் சிவஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆட்டோ தொழிற்சங்கத்தினருக்கு உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டோ ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் ஆனது.
ரூ. 100 அபராதம்
சுமார் 3000 ஆட்டோக்களை போலீசாரும், போக்குவரத்து துறை போலீசாரும் பிடித்து வைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து நடந்த பேச்சு வார்த்தையில் ரூ.2600-க்கு பதில் ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்க போலீசார் ஏற்றுக் கொண்டனர். பிடிபட்ட ஆட்டோக்களை அதன் டிரைவர்கள் அபராத தொகையாக ரூ.100 மட்டும் செலுத்தி ஆட்டோவை மீட்டு வருகின்றனர் என்று ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் தெரிவித்தார்.
மீட்டர் போடாத ஆட்டோக்கள்
போலீசார் மீட்டர் போடாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுப்பது இல்லை. ஆனால் பொது மக்களை மிரட்டி ஆட்டோக்கள் மீது புகார் கொடுக்க வைத்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதனை போலீசார் நிறுத்த வேண்டும். பொய் வழக்குகள் போட கூடாது.
போராட்டம் வாபஸ்
ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் இனி மீட்டர் போட்டுதான் ஆட்டோவை ஓட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் ஆகிவிட்டதாகவும் சேஷசயனம் தெரிவித்தார்.