அங்கிட்டு வழக்குகளுக்கு மேல் வழக்கு... இங்கிட்டு திருமுருகன் காந்திக்கு ஜாமீன்!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைத்தது.
இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபட்ச ராணுவத்தால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதை கண்டித்தும் உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 17 இயக்கத்தினர் மே 21-ஆம் தேதி அனுமதியின்றி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே அவர்களது சிறை காவல் முடிவடைந்தபோதும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தர். இந்நிலையில் காவிரி பிரச்சினையின்போது கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது மே 17 இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரை ஜூன் 14-ஆம்தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பு ரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் தற்போது வழக்கு பதிவு செய்தனர்.
அப்போது சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு திருமுருகன்காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்ததை அடுத்து திருமுருகன் காந்திக்கு இந்த வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைத்தது.












Click it and Unblock the Notifications