வெள்ளம் குறைந்ததால் தலையணையில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் குஷி
களக்காடு: களக்காடு தலையணையில் வெள்ளம் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு குளியல் நடத்த தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த மூன்று தினங்களாக களக்காடு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் தலையணையில் கட்டுகடங்காத வெள்ளம் வந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த 7ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவு தெரியாமல் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் அருகே பகுதியில் குளித்து சென்றனர். இந்த நிலையில் மழை படிப்படியாக குறைந்ததால் வெள்ளமும் குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மாலை விலக்கி கொள்ளப்பட்டது.
மகிழ்ச்சி...
இதை தொடர்ந்து தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
தடுப்புக் கயிறு...
தடுப்பணை அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர்.
கவனம் தேவை...
தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு பாராஸ்டர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எச்சரிக்கை...
மேலும் சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் கொண்டு செல்ல கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.