ஆகஸ்ட் 22-ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ஏடிஎம்கள் பாதிக்கப்படும்!
ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை: வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடன்களை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் செய்யக் கூடாது. வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
எனவே வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்னையில் வங்கிகள் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், வரும் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வங்கிகளை தனியார்மயமாக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.5000 என்ற நிர்ணயித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக் கடன்கள் வசூலிக்கப்படவில்லை. மக்களும் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தி அதிகமானால் போராட்டங்கள் அதிகரிக்கும். பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றார் அவர்.