ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுக அரசோடு பாஜக கூட்டு- ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஊழல் செய்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும், அதற்கு துணை நிற்கும் பாஜகவும் ஏதோ ஒரு கூட்டு வைத்திருப்பது போல தெரிகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஊழல் செய்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும், அதற்கு துணை நிற்கும் பாஜகவும் ஏதோ ஒரு கூட்டு வைத்திருப்பது போல தெரிகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடந்து வரும் ஊழல்களைப் பற்றி கமல் சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு பாஜக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருக்கிறது. கமல் பேசுவது தவறு என்று சொல்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ள கோவில் குளங்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கேயும் பெட்ரோ கெமிக்கலுக்காக இடங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அதற்கு அரசு அனுமதி தந்திருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சொல்கிறதே? என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி., திட்டம் என்பது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக அமைந்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்தநேரத்தில் இப்படி அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனை தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் மக்களுக்கு கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அதுவும் மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் எள் என்றால் எண்ணெய் என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார்.
பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த குதிரைபேர ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை என்றார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கிறது எனறு செய்திகள் வருகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளித்த ஸ்டாலின், இன்று தமிழகத்தின் முதல்வராக குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடத்தில் கேட்க வேண்டும். நான் பலமுறை இதற்கு பதில் கூறிவிட்டேன். அவர்தான் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் இதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
கமல் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன ஸ்டாலின், கமல்ஹாசனை பொறுத்தவரையில், அதிமுக ஆட்சியில் நடந்து வரும் ஊழல்களைப் பற்றி சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு பாஜக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருக்கிறது.
கமல் பேசுவது தவறு என்று சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஊழல் செய்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும், அதற்கு துணை நிற்கும் பாஜகவும் ஏதோ ஒரு கூட்டு வைத்திருப்பது போல தெரிகிறது, அதுதான் இதிலிருந்து புலப்படுகிறது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.