கார் விபத்தில் மாணவி பலி… துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கைது
திருப்பூர்: அதி வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் மாணவி பலியான வழக்கில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன், சட்டசபை துணை சபாநாயகராக உள்ளார். இவருக்கு 19 வயதில் பிரவீன் என்ற மகன் உள்ளார். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், கடந்த 3ம் தேதி, தன்னுடன் படித்துக் கொண்டிருக்கும் சக மாணவிகள் 5 பேரோடு காரில் ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழி சாலையில் அதி வேகமாக பிரவீன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி மறுபுறம் பாய்ந்ததோடு, ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் பிரவீனோடு சென்ற மாணவி சுரேகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிரவீன் உட்பட 5 பேரும் படுகாயம் அடைந்து திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு காரில் வந்த 2 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தீவிர விசாரணையில் பெருமாநல்லூர் போலீசார் ஈட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரவீன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.