சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ஆயிரம் பேரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்க மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பி வைத்தது. அந்த குழுக்களுடன் முப்படை வீரர்கள் குழுக்களும் சேர்ந்து இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளன.
50 தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், 13 ராணுவ குழுக்களும் சென்னையில் மக்களை மீட்டு வருகின்றன. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன இந்த குழுக்கள்.
இந்நிலையில் உணவுப் பொருட்கள், 4 லட்சம் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை 27 லாரிகளில் சென்னைக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே டெல்லியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் மறு ஆய்வு கூட்டத்தில் சென்னை நிலவரம் பற்றி தான் விவாதிகக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள லாரிகளை அதிமுகவினர் வழிமறித்து அம்மா ஸ்டிக்கர் ஒட்டமாட்டார்கள் என்று நம்புவோமாக.