டிஜிபி ராஜேந்திரனின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு- தலைமைச் செயலருக்கு ஹைகோர்ட் கிளை நோட்டீஸ்
தமிழக காவல்துறை டிஜிபியாக ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: குட்கா லஞ்ச விவகாரத்தில் சிக்கிய தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபியாக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ராஜேந்திரனின் பதவிக் காலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய டிஜிபி யார் என்பது குறித்து மத்திய தேர்வாணையத் தலைவர் தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து டிஜிபியாக இருந்த ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் அவர் லஞ்சம் பெற்றதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் லஞ்ச ஒழிப்பு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பணிநீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவிக்கையில், டிஜிபி ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை குறித்த ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications