ஏ இங்க பாரு.. நானும் அதிமுகதான்.. நானும் அதிமுகதான்.. அதிர வைத்த "ஏ.சி"
சென்னை: சென்னையில் உதவி போலீஸ் கமிஷனராகப் பணியாற்றி வரும் ஒருவர் அதிமுகவில் போட்டியிட விரும்பி சீட் கேட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
தனது பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், பதவியில் நீடித்துக் கொண்டே அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி இவர் டிக்கெட் கேட்டுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை இவருக்கு சீட் கிடைக்காமல் போகும்பட்சத்தில் இவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பகுதியில் தேர்தல் எந்த அளவுக்கு நேர்மையாக, நியாயமாக, நீதியாக நடைபெறும் என்பதை கற்பனை செய்தெல்லாம் பார்க்கத் தேவையில்லை.. உள்ளங்கை நெல்லிக்கனி!
சட்டசபைத் தேர்தல்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மக்களைத் தவிர மற்ற அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர். யார் யார் என்னெல்லாம் செய்கிறார்கள் என்பதை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு விரலை தயார்படுத்தி வருகிறார்கள்.
விருப்ப மனுக்கள்
தற்போது அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் குவிந்து வருகிறதாம்.
அதிமுக விருப்ப மனுக்கள்
அதிமுகதான் முதலில் விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பி்த்தது. ஜனவரி 20ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. பின்னர் தேதி நீடிக்கப்பட்டு நேற்றுடன் விருப்ப மனு வழங்குவது முடிவடைந்தது.
உதவி ஆணையரின் விருப்ப மனு
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த உதவி போலீஸ் கமிஷனர் ஒருவரும் அதிமுகவில் டிக்கெட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ம் தேதி இவர் விருப்ப மனுவைக் கொடுத்துள்ளார்.
மது விலக்கு ... பீர் முகம்மது
மது விலக்குப் பிரிவி உதவி ஆணையராக இருப்பவர் பீர் முகம்மது. இவர்தான் சீட் கேட்டு மனு கொடுத்துள்ளார். இவர் பிப்ரவரி 3ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடக் கோரி விருப்ப மனுவைச் சமர்ப்பித்துச் சென்றுள்ளார்.
குடும்பமே அதிமுகதான்
இவரது குடும்பமே அதிமுகதானாம். இவரது பூர்வீகம் மானாமதுரை. தற்போது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இவர்கள் செட்டிலாகியுள்ளனர். இவரது அண்ணன் குடும்பத்தோடு திருப்பூரில் உள்ளார். அங்கு அவர் பகுதி அதிமுக செயலாளராக இருக்கிறாராம். பீர் முகம்மதுவும் கூட போலீஸ் வேலைக்கு வருவதற்கு முன்பு அதிமுகவில் தீவிரமாக் செயல்பட்டுள்ளார். இப்போது சீட் கேட்டுள்ளார்.
எப்படி இப்படி..!
பாரபட்சம் பார்க்காமல் செயல்பட வேண்டிய போலீஸ் பணியில் இருந்து கொண்டு கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்டுள்ள உதவி ஆணையர் செயலால் பரபரப்ப ஏற்பட்டுள்ளது. ஆனால் இது புதிதில்லை. தேனி மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தொடர்ந்து பகிரங்கமாக அதிமுககாரராகவே செயல்படுகிறார். ஜெயலலிதா சிறைக்குப் போய் திரும்பியபோதும், ஆர்.கே.நகரில் வென்றபோதும் மொட்டை போட்டு பரபரப்பைக் கூட்டியவர் இவர்.
இதுதவிர சீருடையில் இருந்தபடியே பல போலீஸார் அதிமுக ஆதரவாளர்கள் போலவே செயல்படுவதை மக்களும் அறிவார்கள்.