நடுவழியில் நின்ற ரயில்கள்... தண்டவாளத்தில் நடந்தே வீடு வந்து சேர்ந்த பயணிகள் - வைரலான வீடியோ
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் சூழ்ந்த காரணத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து அலுவலகத்திற்கு செல்லவேண்டிய பயணிகள் தண்டவாளங்களில் வெள்ளநீரில் நடந்து வந்து அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மதியம் தொடங்கிய மழை தற்போது வரை செய்து வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரலை வந்தடையும் புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் ஆங்காகாங்கே நிறுத்தப்பட்டன. அம்பத்தூரில் இருந்து பேசின் பிரிட்ஜ் வரை ரயில்கள் சுமார் 500 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தண்டவாளத்திலேயே நடந்து வந்து சென்னை சென்ட்ரலை வந்தடைந்தனர்.
நேற்று காலை 7 மணிக்கு ஏற்பட்ட சிக்னல் கோளாறு தற்போது வரை சரிசெய்யப்படவில்லை. கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மார்க்கமாக சென்னை சென்ட்ரலை வந்தடையும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதேபோல், மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவைகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடந்தே சென்ட்ரல் வந்தடைந்தனர். பின்னர் சென்ட்ரலில் இருந்து பேருந்து மூலம் பொதுமக்கள் அலுவலகம் வந்தடைந்தனர்.
ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்க காரணம் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் என்ற புகார் எழுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் இருந்த தண்ணீரை, ரயில்வே தடுப்புச் சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதே வெள்ளநீர் தண்டவாளங்களில் தேங்க காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications