எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உரையில், திருவாரூர் மாவட்டத்திற்கு சர்ப்ரைஸ் திட்டங்கள் அறிவித்த முதல்வர்!
திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவாரூர் : வலங்கைமான், அரித்துவாரமங்கலம் காவல் சரகங்கள் தஞ்சாவூரில் இருந்து திருவாரூருடன் சேர்க்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை திருவாரூர் மாவட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா வழியில் மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட அமைச்சர் காமராஜ் விடுத்த கோரிக்கையை ஏற்று சில அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார் அவை : வலங்கைமான், அரித்துவாரமங்கலம் காவல் சரகங்கள் தஞ்சாவூரில் இருந்து திருவாரூருடன் சேர்க்கப்படும். ஆலங்குடி, வலங்கைமான் மின்வாரிய அலுவலகங்கள் தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் இருந்து திருவாரூர் வட்டத்தில் சேர்க்கப்படும்.
சவலக்காரன் கிராமத்தில் 110 KV திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படும். கடவாசல் பேருந்து நிலையத்திற்கு புதிய உட்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டு தரம் மேம்படுத்தப்படும். கும்பகோணம் சாலையை இணைக்கும் விதமாக சூடாமணி சூடாமணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்க அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் மீது பரிசீலனை நடத்தப்படும். குடவாசலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அரசு தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு 'டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி' என அதற்கு பெயர் சூட்டப்படுகிறது.