கோவை: சர்க்கரை நோயாளியை ‘குடிமகன்’ என நினைத்து தாக்கிய டிரைவர், கண்டெக்டர் கைது
கோவை: சர்க்கரை நோயால் மயக்கமடைந்த பயணியை, மது போதையில் உள்ளார் என நினைத்துத் தாக்கிய தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், பரமத்தியைச் சேர்ந்தவர் வேலுசாமி (30). சர்க்கரை நோயாளியான இவர், கடந்த திங்களன்று திருப்பூரில் இருந்து கோவை வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
பேருந்து கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தபோது பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் இறங்கிச் சென்று விட, சர்க்கரை நோயாளியான வேலுசாமி மட்டும் மயங்கிய நிலையில் பேருந்திலேயே அமர்ந்திருந்துள்ளார்.
சோர்ந்து போய் அமர்ந்திருந்த வேலுச்சாமி, மது போதையில் உள்ளார் என தவறுதலாக நினைத்த அப்பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் அவரை அடித்து வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பேருந்தில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், விரைந்து வேலுச்சாமிக்கு உதவி செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குறித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில், பேருந்து நடத்துநர் சக்திவேல் (39), ஓட்டுநர் ராமலிங்கம் (32) ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications