காங்கிரஸுக்கான 41 தொகுதிகள் ”லிஸ்ட்” இன்றோ, நாளையோ முடிவாகும்- ஸ்டாலின் தகவல்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில்கூட்டணியில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கூறி 70 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவினர் அளித்தனர். அதில் 41 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தனர். திமுகவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் பரிசீலித்துவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினர்.இதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பங்கேற்றனர். இதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் முன் வைத்தது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி இன்று அல்லது நாளை இறுதி செய்யப்படும். மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.